முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்
கன்னியாகுமரி: நிலமோசடி புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ள தி.மு.க., முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி தி.மு.க., மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் அஜிதா மனோதங்கராஜ். இவருக்கு நாகர்கோவிலை சேர்ந்த தயாபாக்ய சிங் என்பவர் தனக்கு சொந்தமான பத்தரை ஏக்கர் நிலத்தை விலைக்கு கொடுத்தார்.
இதில் ஒரு பகுதி தனியார் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருவதால் வனத்துறையினர் தடையில்லா சான்றிதழ் வாங்கி தருவதாக அஜிதா கூறியதால் முதற்கட்டமாக மூன்று ஏக்கர் ஒன்பது சென்ட் நிலம் பவர் எழுதி வாங்கப்பட்டது. மீதமுள்ள நிலத்துக்கு தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பணம் கேட்ட போது தயாபாக்யசிங் கொடுக்க மறுத்தார்.
இதையடுத்து அப்போதைய அமைச்சர் சுரேஷ்ராஜனும், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் ஜி.எம்.ஷாவும் சேர்ந்து மிரட்டியதாகவும், பின்பு போலியாக ஆவணம் தயாரித்து சரவணபிரசாத் என்பவருக்கு அந்த நிலத்தை விற்றதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வழக்கு பதிய மறுத்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனால், இந்த புகாரின் மீது வழக்குப் பதிய நாகர்கோவில் இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில் இந்த புகார் மீது சுரேஷ்ராஜன், அஜிதா, ஷா ஆகியோர் மீது வழக்குப் பதிய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இவர்கள் மீது வடசேரி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் அவர்கள் இருவரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு நீதிபதி ஆர்.மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சுரேஷ்ராஜன் உள்ளிட்ட இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications