விபத்தில் கால் முறிந்த வாலிபருக்கு தனியார் மருத்துவமனையி்ல் கல்யாணம்
கொச்சி: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவருக்கு, மருத்துவமனையிலேயே திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் உறவினர்களும் கலந்து கொண்டனர்.
பொதுவாக மருத்துவமனைகளில், அவசர சிகிச்சை மையம், புறநோயாளிகள் மையம், அறுவை சிகிச்சை மையம் என பல பிரிவுகள் இருக்கும். ஆனால் அங்கே எங்கும் குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த மருத்துவமனை நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை. இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவருக்கு மருத்துவமனை வார்டிலேயே திருமணம் நடந்த சுவாரசிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரள மாவட்டம், ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் பிராத்யூஸ். கடந்த சில நாட்களுக்கு முன் பைக்கில் சென்றபோது, விபத்தில் சிக்கினார். இதில் இவரது இடதுகால் முறிவு ஏற்பட்டு, அதேபகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பிராத்யூஸின் காலில் காயம் குணமாகி, அவர் எழுந்து நடக்க பல மாதங்கள் காத்திருக்க வேண்டும் என டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிராத்யூஸின் திருமணம் நேற்று திட்டமிடப்பட்டிருந்ததை மருத்துவமனை பணியாளர்கள் அறிந்தனர்.
இருப்பினும், உடல்நலம் ஒத்துழைக்காமல் திருமணம் தள்ளி போகும் என பிராத்யூஸ் வருந்தினார். இதையடுத்து, மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பிராத்யூஸ் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஐடியா ஒன்றை கூறினார்.
அதற்கு எல்லா தரப்பினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, நேற்று தனியார் மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள பொதுவார்டு மலர்களாலும், அலங்கார பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டது. நடக்க முடியாத பிராத்யூஸ் மணமகன் அலங்காரத்தில் வீல்சேரில் கொண்டு அழைத்து வரப்பட்டார். அவருக்கு ஏற்கனவே நியமிக்கப்பட்ட மணப்பெண் அலங்கரிக்கப்பட்டு, நர்ஸ்கள் மணப்பெண் தோழிகளாக மாறி அழைத்து வந்தனர்.
பின்னர் பொது வார்டில் இருந்த இருக்கையில் அமர்ந்தபடி, முக்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமின்றி, வார்டு நோயாளிகளுடன் சேர்ந்து தீர்மானிக்கப்பட்ட அதேநேரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
மருத்துவமனையி்ல் திருமணம் நடத்தியது குறித்து பெயர் வெளியிட விரும்பாத டாக்டர்கள் கூறியதாவது, நோயாளியின் மனநிலை சோர்ந்து காணப்பட்டால், அவருக்கு உடல் குணமாக்கும் காலம் அதிகரிக்கும். மணமகன் கொண்டிருந்த துக்கம், நியாயமானது என்பதால் அதை நிறைவேற்றி கொடுத்தோம் என மகிழ்ச்சியோடு கூறினர். மருத்துவமனை திருமணம், மணமக்களுக்கும், அதில் பங்கேற்றவர்களுக்கும் மறக்க முடியாத நாளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் வருவது போலவே உள்ளதல்லவா இந்த காட்சி...












Click it and Unblock the Notifications