விபத்தில் இருந்து தப்பிய பெண் அமைச்சர் செல்வி ராமஜெயம்!
விருத்தாசலம் : விருத்தாலசம் அருகே விபத்தில் இருந்து தமிழக சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தமிழக சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நடைபெறும் விழாவிற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.
விருத்தாசலம் சத்தியவாடி அருகே அமைச்சர் செல்வி ராமஜெயத்தின் கார் சென்று கொண்டிருந்தது. அந்த இடத்தில் அரசு பேருந்து ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது.
இந்த நிலையில், பழுதாகி நின்றிருந்த பஸ்சை திட்டக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து முந்திச் செல்ல முயன்றது.
அப்போது அமைச்சரின் கார் எதிரே வந்தது. அதை கவனிக்காத அரசு பஸ் டிரைவர், அமைச்சரின் கார் அருகே வந்து பிரேக் போட்டார்.
பஸ் மோதுவது போன்று வருவதை கவனித்த அமைச்சரின் கார் டிரைவர், சாலையோரமாக காரை இறக்கி நிறுத்தினார். இதனால் அமைச்சர் செல்வி ராமஜெயம் விபத்தில் இருந்து தப்பினார்.
இது குறித்து அமைச்சரின் பாதுகாப்புக்கு சென்ற போலீசார் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே விசாரணையில் இறங்கிய போலீசார், அந்த பேருந்தை வழிமறித்து தடுத்து நிறுத்தி டிரைவர் பெரியசாமி, நடத்துனர் சுப்பிரமணியன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.