திருப்பூர் அருகே கார்-அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
தாராபுரம்: திருப்பூர் அருகே காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள குமரன் கல்லூரி அருகே உள்ள எஸ்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகரசுதன் (33). பஞ்சு வியாபாரி. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கூவக்காபட்டியில் உள்ள அக்கினி அம்மன் கோவில் தான் அவருடைய குல தெய்வ கோவில்.
இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக ஹரிகரசுதன் தனது மனைவி சுதா (25), மகன் பிரணவ் கண்ணா (4), 4 மாத பெண் குழந்தை, தம்பி பாலச்சந்திரன் (30), தாயார் கலாவதி (55) ஆகியோருடன் கூவக்காபட்டிக்கு சென்றார்.
அங்கு கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி கும்பிட்டுவிட்டு அனைவரும் நேற்று மதியம் காரில் திருப்பூருக்கு கிளம்பினார்கள். காரை ஹரிகரசுதன் ஓட்டினார். அவர்கள் கார் நேற்று மாலை 4. 45 மணிக்கு திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே உள்ள நால் ரோட்டில் இருக்கும் தனியார் மில் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது திருப்பூரில் இருந்து தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதின. இந்த பயங்கர விபத்தில் கார் அப்பளம் போன்று நொறுங்கியது. இதையடுத்து பேருந்து ஓட்டுனர் தப்பியோடிவிட்டார். இந்த கோர விபத்தில் ஹரிகரசுதன், கலாவதி, சுதா ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். பாலசந்திரன், பிரணவ் கண்ணா மற்றும் 4 மாத பெண் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
அவர்கள் 3 பேரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தனர். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பித்து ஓடிய பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
இந்த விபத்தில் பலியான பாலச்சந்திரனுக்கும், கோவையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று தான் நிச்சயதார்த்தம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications