கலவரம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை
மதுரை: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தின கலவரம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிடுமாறும், தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினமான செப்டம்பர் 11 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தாண்டும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் இதே மாவட்டம் முத்துராமலிங்கபுரம் பள்ளப்பசேரி கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் தங்கவேல் என்ற தலித் மாணவனை சாதி வெறி கொண்ட கும்பல் படுகொலை செய்துள்ளது.
தலித் மக்களை ஒட்டு மொத்தமாக மிரட்டி அச்சுறுத்தும் நோக்கத்தோடு ஆதிக்க சக்திகளால் செய்யப்பட்ட இந்த படுகொலை கண்டனத்துக்கு உரியதாகும். இந்நிலையில், ஜான்பாண்டியனை கைது செய்திருப்பது காவல்துறையின் முதிர்ச்சியற்ற நடவடிக்கையை காட்டுகிறது. இதனால் தான் நிலைமை மேலும் மோசமடைந்து விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளன. பரமக்குடியில் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் பைபாஸ் ரோடு சிந்தாமணியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிலர் படுகாயமடைந்துள்ளனர். போலீசாரின் இத்தகைய தவறான அணுகுமுறைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதனால் தான் இராமநாதபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த ஒட்டு மொத்த சம்பவம் குறித்து தமிழக அரசு உடனடியாக உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிடுமாறும், தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குமாறும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும், நிவாரணமும் அளிக்க வேண்டும்.
சமூக சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் ஏற்பட இணைந்து செயல்படுமாறு அனைத்துப் பகுதி மக்களையும், ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.