கென்யாவில் எரிபொருள் பைப் வெடித்ததில் 100 பேர் பலி
நைரோபி: கென்ய தலைநகர் நைரோபியில் எரிபொருள் பைப் வெடித்ததில் 100 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
ஆப்பிரிக்க நாடான கென்யா தலைநகரில் எரிபொருள் பைப்லைன் வெடித்ததில் 100 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 100 பேர் பலியாகியுள்ளனர். அவர்கள் உடல்களை வைக்கும் பைகளுக்காக காத்திருக்கிறோம் என்று நைரோபி பகுதி போலீஸ் கமாண்டர் தாமஸ் அடூடி தெரிவித்தார்.
நைரோபியில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான லுங்கா லுங்காவைச் சுற்றியுள்ள சினாய் சேரிப் பகுதியில் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் ஜோசப் ம்வீகோ கூறுகையில், "எரிபொருள் பைப்லைனில் கசிவு ஏற்பட்டது. அதில் இருந்து ஒழுகும் எரிபொருளை சேரி மக்கள் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் அந்த பைப்லைன் வெடித்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி தந்தது," என்றார்.
இதில் எரிபொருள் பிடித்துக் கொண்டிருந்த பலர் சிக்கினர். அவர்கள் உடல் கருகி உயிர் இழந்தனர். தீ எரியும் இடத்தைச் சுற்றி கருகிய பிணங்களாகக் கிடந்தன.
இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். அங்கிருந்த மக்களை அப்பகுதியை விட்டு வெளியேற்றினர்.
கடந்த 2009-ம் ஆண்டு வடக்கு கென்யாவில் விபத்துக்குள்ளான எரிபொருள் டேங்கர் தீப்பிடித்ததில் 122 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications