வீரபாண்டி ஆறுமுகம், ரங்கநாதன் சிறை மாற்றம்: எழுத்துப்பூர்வ விளக்கம் கேட்டு அரசுக்கு உயர் நீதிமன்றம்
சென்னை: முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், முன்னாள் எம்.எ.ல்.ஏ. ரங்கநாதன் ஆகியோரை வேறு சிறைகளுக்கு மாற்றியதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நில அபகரிப்பு வழக்கில் கைதான முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திருச்சி சிறையிலும், முன்னாள் எம்.எ.ல்.ஏ. ரங்கநாதன் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களை சேலம் மற்றும் புழல் சிறைக்கு மாற்ற மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து வீரபாண்டி ஆறுமுகம் மகன் ராஜா, ரங்கநாதனின் மனைவி நளினி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்கள் நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் மகாராஜன் ஆஜரானார். அவர் வாதாடுகையில் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தான் இருவரையும் வேறு சிறைகளுக்கு மாற்றியதாகத் தெரிவித்தார்.
அதற்கு அரசு தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கு வரும் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்று தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞரை ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன்
திமுக நிர்வகாகியை கொலை செய்யத் தூண்டியது உள்பட 3 வழக்குகளில் கைது செய்யப்பட்ட திருச்செந்தூர் திமுக எம்.ல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷை கொலை செய்யத் தூண்டியது, இங்குள்ள நகர திமுக அலுவலகத்திற்கு தீ வைக்கத் தூண்டியது, டாஸ்மாக் பார் மீது குண்டுவீசத் தூண்டியது ஆகிய 3 வழக்குகளில் திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில அடைக்கப்பட்டார்.
இந்த 3 வழக்குகளிலும் ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு 7 முறை தள்ளிவைக்கப்பட்டு இன்று இறுதியாக நீதிபதி பிரபுதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications