ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சர் நேரில் ஆறுதல்

சென்னை வந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
திணேஷ் திரிவேதியுடன், இணை அமைச்சர் முனியப்பா, ரயில்வே வாரியத் தலைவர் குப்தா ஆகியோரும் உடன் வந்தனர்.
சென்னை வந்த திரிவேதியிடம், விபத்து குறித்துக் கேட்டபோது, நின்ற ரயில் மீது மோதிய ரயில் அதி வேகமாக வந்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதான் விபத்துக்கு முக்கியக் காரணம்.
அந்த ரயிலின் டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அது சோதனையில் உறுதி செய்யப்படவில்லை.
அந்த ரயிலின் டிரைவர் 16 மணி நேர ஓய்வுக்குப் பின்னர்தான் ரயிலை இயக்கியுள்ளார். எனவே அவர் சோர்வாக இருந்திருக்கலாம் எனக் கூற முடியாது என்றார் திரிவேதி.
இதையடுத்து ரயில்வே உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய திரிவேதி சென்னை அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு காயமடைந்து அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைப் பார்த்துத ஆறுதல் கூறினார்.
மோதிய ரயிலின் டிரைவர் ராஜ்குமாரும் படுகாயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை விஜயத்தை முடித்துக் கொண்ட பின்னர் திரிவேதி அரக்கோணம் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக அரக்கோணம் ரயில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அவர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த விபத்துக்கு மனிதத் தவறு காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். விசாரணைக்குப் பின்னரே அது தெரிய வரும் என்றார்..
ரூ. 5 லட்சம் இழப்பீடு
முன்னதாக விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தெற்கு ரயில்வே பொது மேலாளரைத் தொடர்பு கொண்ட அமைச்சர் திணேஷ் திரிவேதி, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் அளிக்கப்படும், சாதாரண காயமடைநந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications