பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க மீண்டும் சதி!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தில் பாறங்கல்லை வைத்து பொதிகை எக்ஸ்பிரசை கவிழ்க்க மீண்டும் சதி நடந்தது. அதி்ர்ஷ்டவசமாக போலீசார் முன் கூட்டியே கண்டுபிடித்து அகற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னையில் இருந்து கடந்த 13ம் தேதி செங்கோட்டை வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தில் கான்கீரிட் சிலிப்பர்களை வைத்து கவிழ்க்க சதி நடந்தது. லோகை பைலட்டின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்தில் இருந்து தப்பியது.
தமிழக ரயில்வே ஐஜி சுனில்குமார் நேற்று மாலை சங்கரன்கோவில் வ்ந்து ரயிலை கவிழ்க்க சதி நடந்த இடத்தை பார்வையிட்டார். அவருடன் விருதுநகர் மாவட்ட எஸ்பி நஜ்முல் ஹோடா, ரயில்வே எஸ்பி தமிழ்சந்திரன், மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர். பின்னர் கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு ஐஜி சுனில்குமார் சென்று நாசவேலையில் ஈடுபட்ட மர்ம கும்பலை கைது செய்வதற்கான வியூகம் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நெல்லை புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை நேற்று மீண்டும் கவிழ்க்க சதி நடந்தது. செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பொதிகை ரயில் நேற்று இரவு 7 மணிக்கு புறப்பட்டது. 8 மணிக்கு சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இலவன்குளம்-மனலூர் இடையே சென்றபோது தண்டவாளத்தில் பாறங்கல் வைத்திருந்ததை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் நடுக்காட்டில் திடீரென ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலா நின்றதற்கான காரணம் தெரியாமல் பயணிகள் பீதி அடைந்தனர். போலீஸ் அதிகாரிகள் பாறங்கல்லை அப்புறப்படுத்தினர். மேலும் தண்டவாளத்தில் வேறு இடங்களில் நாசவேலை நடந்துள்ளதா என தீவிரமாக சோதனையிடப்பட்டது. தொடர்ந்து மீண்டும் ரயில் செல்ல அனுமதிக்கப்பட்டது. சுமார் 10 நிமிடம் தாமதத்திற்கு பிறகு பொதிகை எக்ஸ்பிரஸ் ராஜபாளையத்திற்கு புறப்பட்டு சென்றது.












Click it and Unblock the Notifications