ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம், ஆவணங்கள் பறிமுதல்
பெல்லாரி: சுரங்க ஊழல் வழக்கில் கைதாகியுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மைத்துனர் பி. ஸ்ரீனிவாஸ் ரெட்டியின் வங்கி லாக்கரில் இருந்து 10 கிலோ தங்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சுரங்க ஊழலி்ல் ஈடுபட்டதற்காக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது மைத்துனர் பி. ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோரை சிபிஐ கடந்த 5-ம் தேதி பெல்லாரியில் வைத்துக் கைது செய்து ஹைதராபாத் கொண்டு சென்றது. அவர்களை கைது செய்வதற்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 4. 5 கோடி ரொக்கம், 30 கிலோ தங்கம், ஹெலிகாப்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சிபிஐ குழு ஹைதராபாத்தில் இருந்து நேற்று பெல்லாரி வந்தது. அவர்களுடன் பி. ஸ்ரீனிவாஸ் ரெட்டியையும் அழைத்து வந்தனர். அங்கு ஆக்சிஸ் வங்கியில் பி. ஸ்ரீனிவாஸ் ரெட்டிக்கு சொந்தமான 12 வங்கிக் கணக்குகள், 6 லாக்கர்களை சோதனையிட்டனர்.
இந்த சோதனை நேற்று முழுவதும் நடந்தது. மாலை நேரத்தில் ஸ்ரீனிவாஸ் ரெட்டியின் மனைவி ஸ்ரீலதா, அவருடைய 3 குழந்தைகள் வங்கிக்கு வந்தனர். சிபிஐ அதிகாரிகள் ஸ்ரீலதாவிடம் வங்கிக் கணக்குகள் மற்றும் லாக்கர்கள் குறித்து வாக்குமூலம் வாங்கிக் கொண்டனர். குழந்தைகள் தந்தையைப் பார்க்க வந்தனர்.
இந்த சோதனையி்ல் லாக்கர்களில் இருந்து பல முக்கிய ஆவணங்கள், 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர கடந்த வியாழக்கிழமை ஆந்திர மாநிலம் குந்தகல்லில் சிக்கிய ரூ. 5 கோடி குறித்தும் ஸ்ரீனிவாஸிடம் விசாரணை நடத்தவிருக்கின்றனர்.
ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது சகோதரர்கள் நடத்தும் ஒபுலபுரம் சுரங்க நிறுவனத்தின் எம்.டி.யாக இருப்பவர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி. ஸ்ரீனிவாஸ் ரெட்டியை இன்னும் 3 வங்கிகளுக்கும், ஒபுலாபுரம் நிறுவனத்திற்கும் அழைத்துச் செல்ல சிபிஐ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 11 மணி நேர சோதனைக்குப் பிறகு சிபிஐ குழு ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications