ஓட்டுப் போட்டதுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்- பிள்ளையார் முன்பு புலம்பியபடி போராட்டம்!
மதுரை:' ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஓட்டுப் போட்டதுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். மத்திய அரசுக்கு நல்ல புத்தியைக் கொடுப்பா பிள்ளையாரப்பா என்று வேண்டியபடி உக்கி போட்டு நூதனப் போராட்டம் நடத்தினர் இந்து இளைஞர் பேரவையினர்.
மதுரையில்தான் இந்த கூத்தான போராட்டம் இன்று காலை நடந்தது. மேலமாசி வீசியில் உள்ள நேரு ஆலால விநாயகர் கோவிலுக்கு இந்து இளைஞர் அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் இன்று காலை வந்தனர்.
அவர்களில் ஒரு பிரிவினர் தேங்காய்களை உடைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்னொரு பிரிவினர் தெருவைப் பார்த்தபடி உக்கி போட்டு போராட்டத்தில் குதித்தனர்.
பெட்ரோல் விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆனால், விலை உயர்வு நியாயமானது என்கிறார் திட்ட கமிஷன் அதிகாரி அலுவாலியா. மத்திய அரசின் நிதி அமைச்சரோ விலை உயர்வை பொறுத்துக் கொள்ளச் சொல்கிறார். இதில் எங்களால் ஆவது ஒன்றுமில்லை என்று கையை விரிக்கிறார். பிள்ளையாரப்பா... இவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடு. ஓட்டு போட்ட பாவத்துக்கு எங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று சத்தமாக கோஷமிட்டபடி அவர்கள் உக்கி போட்டனர்.
இந்த நூதனப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications