திருச்சி மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் ஜெயாவை எதிர்த்து மகளிர் அணி நிர்வாகி விலகல்
திருச்சி: அதிமுக சார்பில், திருச்சி மாநகராட்சி மேயர் வேட்பாளராக எம்.எஸ்.ஜெயா அறிவிக்கப்பட்டதை கண்டித்து, மகளிர் அணி நிர்வாகி ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.
திருச்சி மாநகர மேயர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக எம். எஸ். ஜெயா -வை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.
கட்சியில் எந்த பொறுப்பும் வகிக்காத இவருக்கு அதிமுக தலைமை சீட் வழங்கியுள்ளது திருச்சி பகுதி அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கட்சியின் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் உமா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அதிமுகவில் இரவு பகல் பாராது, குடும்பத்தைக் கூட மறந்து கட்சிப் பணியாற்றி வரும் எத்தனையோ மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளனர். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முகத்தைக் கூட நேரில் பார்க்காத ஒருவருக்கு மேயர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனக்கு வழங்க வேண்டும் என கூறவில்லை. என்னைவிட பல ஆண்டுகள் கட்சிக்காக அயராது உழைத்த விசுவாசிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருக்கலாம்.
இதை கண்டித்து நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். ஆனால் கட்சி உறுப்பினராக தொடர்கிறேன் என்றார்.
இவர் கடந்த 2006 தேர்தலில் திருச்சி 1 வது தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு தோற்றவர். பின்பு அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications