ரூ 125 கோடி நில அபகரிப்பு: குண்டர் சட்டத்தில் கைதாகிறார் 'லாட்டரி' மார்ட்டின்!
கோவை: நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களின் பேரில் கைதாகி சிறையிலிருக்கும் லாட்டரி மார்ட்டின் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்.
லாட்டரி அதிபராக இருந்து, திமுக ஆட்சிக் காலத்தில் கருணாநிதி வசனம் எழுதிய இரு படங்களின் தயாரிப்பாளராக மாறியவர் மார்ட்டின்.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அவர் பல்வேறு புகார்களில் கைதானார். அவர் கைது மற்றும் விசாரணை குறித்து மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. வன்னியபெருமாள் கோவையில் நிருபர்களிடம் கூறுகையில், "லாட்டரி அதிபர் மார்ட்டின் பல்வேறு வழக்குகளில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குற்ற வழக்குகள் உள்பட 10-க் கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவர் அடியாட்கள், ரவுடி கும்பலுடன் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர் சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்.
எனவே அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் விரைவில் கைது செய்யப்படுவார். மார்ட்டின் மீது சேலம் போலீசார் 3 வழக்குகளும், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ரூ.125 கோடி நிலஅபகரிப்பு வழக்கும் தொடர்ந்துள்ளனர். இவை தவிர மேலும் பல வழக்குகளும் அவர் மீது உள்ளன.
நில அபகரிப்பு வழக்கை மந்தமான அளவில் விசாரணை நடத்துவது, குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவது போன்றவை தொடர்பாக தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது.
நில அபகரிப்பு தனிப்பிரிவில் விசாரணையை சரியாக மேற்கொள்ளாத ஒரு இன்ஸ்பெக்டர், 3 சப்-இன்ஸ் பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற அதிகாரிகள் மீதான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
கோவை மாவட்ட குற்றப்பிரிவையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது", என்றார்.












Click it and Unblock the Notifications