சாலைகள் பெரும் பாதிப்பு.. ஸ்தம்பித்தது போக்குவரத்து... பள்ளிகளுக்கு விடுமுறை!
சென்னை: கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்களில் சாலைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
மழை மேலும் தொடர்ந்தால் நாளையும் விடுமுறை அறிவிக்குமாறு அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தெற்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் ஆங்காங்கே சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்றிரவு 10 மணிக்கு பெய்த மழை இன்று வரை சாரலுடன் பெய்து வருகிறது. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுவதாலும், பல இடங்களில் சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாலும் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்பட நகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வடபழனி, ஈக்காடுதாங்கல், வளசரவாக்கம் பகுதிகளில் பலமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருமுல்லைவாயல், அம்பத்தூர் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் பெருமளவு வெள்ளம் தேங்கி நிற்பதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை. இதனால் மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே கல்லூரிகளுக்கு வந்தனர்.
சென்னை நகரின் பெரும்பாலான இடங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் வேலையும், புறநகர்களில் பாதாள சாக்கடை அமைக்கு பணிகளும் நடைபெற்று வருகின்றன. சில பகுதிகளில் மேம்பாலம், ரயில்வே மேம்பாலப் பணிகள் நடக்கின்றன. இந்த மழை காரணமாக அந்தப் பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டதோடு, சம்பந்தப்பட்ட சாலை அல்லது தெருக்கள் சகதிமயமாகி பயன்படுத்த முடியாத அளவுக்கு ஆகியுள்ளன.
மொத்தத்தில் இந்த மழைக்காலம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போக்குவரத்தையும் அன்றாட வாழ்க்கையையும் கடுமையாக பாதிக்கும் என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர். அரசு புரிந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமா?












Click it and Unblock the Notifications