இது 5வது பட்டியல்..பேரூராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களையும் அறிவித்தார் ஜெ.

உள்ளாட்சித் தேர்தலில் வழக்கம் போல தனது பாணியில் அதிரடியாக செயல்பட ஆரம்பித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. ஆரம்பத்தில், 10 மாநகராட்சிகளுக்கும் மேயர் பதவிக்கான வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்து கூட்டணிக் கட்சிகளை, குறிப்பாக தேமுதிகவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்த நிலையில் அடுத்த அதிரடியாக 52 நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. இதனால் கூட்டணியில் மேலும் நிலைமை குழப்பமானது.
இந்த நிலையில் நேற்றே இன்னொரு அதிரடியாக மேலும் 72 நகராட்சித் தலைவர்கள் பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா. இது அதிமுக வெளியிட்ட 3-வது வேட்பாளர் பட்டியலாகும். 3-வது பட்டியல் வெளியான பரபரபபு அடங்குவதற்குள் நேற்றே 4-வது பட்டியலை வெளியிட்டார். அதில் 70 பேரூராட்சித் தலைவர்கள் பதவிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் இடம்பெற்றிருந்தது. அடுத்தடுத்து வெளிவந்த வேட்பாளர் பட்டியல்களால் அதிர்ச்சி அடைந்த கூட்டணிக் கட்சிகளை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது நேற்று மாலை வெளியான 5-வது பட்டியல். இதில் மேலும் 61 பேரூராட்சித் தலைவர் பதவிக்களுக்கான வேட்பாளர்கள் பெயர் இடம்பெற்றிருந்தது.
இதுவரை எத்தனை?
இதுவரை 131 பேரூராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஜெயலலிதா 10 மாநகராட்சிகளுக்கும் மேயர் வேட்பாளர்களை அறிவித்து விட்டார். அதேபோல மொத்தம் உள்ள 125 நகராட்சித் தலைவர் பதவியிடங்களில் நேற்று மாலை வரை 124 பதவிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். ஒரே ஒரு இடம்தான் தற்போது மீதம் உள்ளது.
6 மேயர் பதவிக்கு பெண் வேட்பாளர்கள்
வேலூர், ஈரோடு, திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 6 இடங்களில் மேயர் பதவிக்கு பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர அறிவிக்கப்பட்டுள்ள 124 நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர்களில் 52 பேர் பெண்கள்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளில் 5 -ம், நாகை மாவட்டத்தில் மொத்த உள்ள 4 நகராட்சிகளும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளரை வென்றவருக்கு சீட்-வேட்பாளரை மாற்ற கோரி ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் வாழப்பாடி பேரூராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பகுதி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாழப்பாடி பேரூராட்சித் தலைவராக உள்ள செல்விரவி என்பவரை அதிமுக மீண்டும் வேட்பாளராக அறிவித்தது. இதற்கு இப்பகுதி ஜெ. பேரவைச் செயலர் முத்துசாமி தலைமையிலான அதிமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
செல்வி ரவி முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார். அவரையே மீண்டும் அதிமுக வேட்பாளராக அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்தும், வேட்பாளரை மாற்றக் கோரியும் முத்துசாமி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications