திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு: கருணாநிதி அதிரடி!
சென்னை: திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிட திடீரென முடிவெடுத்துள்ள திமுக, அதன் வேட்பாளராக ஏற்கனவே போட்டியிட்டுத் தோல்வி அடைந்த கே.என்.நேருவையே நிறுத்தியுள்ளது.
திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலி்ல போட்டியிட கடுமையாக யோசித்து வந்தது திமுக. போட்டியிடலாமா அல்லது போட்டியிடாமல் விலகிக் கொள்ளலாமா என்று அந்தக் கட்சி யோசித்து வந்தது. இதை திமுக தலைவர் கருணாநிதியே நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ஆனால் அப்படிக் கூறிய சில மணி நேரங்களிலேயே திமுக தேர்தலில் போட்டியிடும் என்ற அறிவிப்பு கருணாநிதியிடமிருந்து வெளியானது.
இந்த நிலையில் நேற்று இரவு வேட்பாளர் பெயரையும் கருணாநிதி அறிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
அக்டோபர் 13-ம் நாள் நடைபெறுகின்ற திருச்சி மேற்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில், தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட கழக செயலாளருமான கே.என்.நேரு அறிவிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளளார்.
தற்போது கே.என்.நேரு பல்வேறு நில அபகரிப்பு வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டசபைத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட நேரு, அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மரியம் பிச்சையிடம் தோல்வி அடைந்தார். தற்போது மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார்.
நேரு-ராமஜெயம் மீது மேலும் ஒரு நில அபகரிப்பு- மிரட்டல் வழக்கு:
இந் நிலையில் சிறையில் உள்ள நேரு, அவரது தம்பி ராமஜெயம் ஆகியோர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், ஈரோடு கொல்லாம்பாளையம் பை-பாஸ் ரோட்டை சேர்ந்த சாயப்பட்டறை அதிபர் கருணாநிதி, இவருக்குச் சொந்தமாக திருச்சி கொட்டப்பட்டு, விமான நிலையம் அருகே 9.33 ஏக்கர் நிலம் உள்ளது.
இதை கடந்த 1992ம் ஆண்டு கொட்டப்பட்டில் வசிக்கும் சகோதரிகளின் கணவர்கள் காமராஜ், நாகராஜ், ஆகியோரின் பராமரிப்பில் கருணாநிதி கொடுத்திருந்தார். அதன் பிறகு ஈரோடு சென்றுவிட்டார்.
கடந்த 2008ம் ஆண்டு வந்து பார்த்தபோது கருணாநிதியை நிலத்துக்குள் விட காமராஜ் மற்றும் சிலர் தடுத்தனர். கருணாநிதி கேட்டபோது இந்த நிலத்தை முன்னாள் அமைச்சர் நேரு தரப்பினர் கேட்டு மிரட்டியதாக கூறினார். மேலும் கே.என்.நேரு, கே.என்.ராமஜெயம், துணை மேயர் அன்பழகன் ஆகியோர் கருணாநிதியை காரில் தில்லை நகர் அழைத்துச் சென்றனர்.
அங்கு நிலத்தை மிரட்டி எழுதி வாங்கிச் கொண்டதாகவும், இதற்கு காங்கிரஸ் பிரமுகர் கொட்டப்பட்டு சண்முகம், அவரது சகோதரர் கொட்டப்பட்டு சேது மற்றும் காமராஜ், கார்த்தி, மதன் ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக கருணாநிதி திருச்சி மாநகர நில அபகரிப்பு தனி பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இதன்பேரில் காங்கிரஸ் பிரமுகர், கொட்டப்பட்டு சண்முகம், சேது, காமராஜ் மதன்குமார், கார்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கே.என்.நேரு, ராமஜெயம், துணைமேயர் அன்பழகன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications