பிரபாகரனின் மாமியார் மரணம்- ஏராளமான தமிழர்கள் அஞ்சலி

இலங்கையில் நடந்த இறுதிப் போருக்கு பின்னர் பிரபாகரனின் தந்தை வேலுபிள்ளை, தாயார் பார்வதி அம்மாள் இருவரும் தமிழ் அகதிகள் முகாமில் தங்கியிருந்தபோது சிங்கள ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். ராணுவக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோதே வேலுபிள்ளை மரணமடைந்தார்.
அதன்பிறகு பார்வதி அம்மாள் விடுதலை செய்யப்பட்டார். பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். சொந்த ஊரிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந் நிலையில் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் தாயார் ஏரம்பு சின்னம்மா சமீப காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். கடந்த 6ம் தேதி மரணமடைந்தார். அவரது உடலுக்கு ஏராளமான தமிழர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
கடந்த ஜனவரி மாதம் இலங்கை ராணுவத்தின் தடுப்புக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட இவரை மாலத்தீவில் உள்ள அவரது உறவினர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஒப்படைத்தார்.
இதையடுத்து சின்னம்மா இலங்கையின் புங்குடு தீவுக்கு திரும்பிவிட்டார். அங்கேயே இறந்த அவரது உடல் சொந்த ஊரான சரவணையில் அடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications