3 பேரின் தூக்கு தண்டனைக்கு தடைவாங்கிக் கொடுத்தது வைகோ: விடுதலை சிறுத்தைகள் பாராட்டு
சென்னை: பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனைக்கு 8 வார காலத் தடை வாங்கிக் கொடுத்தது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மரண தண்டனைக்கு எதிரான பயணக் தொடக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. அதற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செ.துரைசாமி, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய வன்னியரசு கூறியதாவது,
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி பெரியார் தி.க. நடத்தும் ஊர்தி பிரச்சார பயண துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் இங்கு பாராட்டவும், எச்சரிக்கவும் தான் வந்துள்ளேன். 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தபோது, செங்கொடி தீக்கிரையானபோது, புற அழுத்தங்கள் கிளம்ப கிளம்ப மக்கள் வீதியில் வந்து போராடிக் கொண்டிருந்தனர்.
அப்போது நீதிமன்றத்தின் வாயிலாக அவர்களின் தூக்கு தண்டனைக்கு 8 வார கால தடை வாங்கிக் கொடுத்த பெருமை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சேரும். எனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து ஒரு எச்சரிக்கை விடுத்துக்கொள்கிறேன். டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதாவது நாங்கள் இலங்கை அரசை பகைத்துக்கொள்ள முடியாது. அதனால் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.
3 பேரை தூக்கிலிட காங்கிரஸார் போராடுகிறார்கள். சிறைக்குள் புகுந்து அவர்களை கொன்றிருக்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார். வீரத் தமிழர்கள் வீதியில் வந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் செவிடன் காதில் விழுந்த சங்காக, எருமை மாட்டின் மீது மழை பொழிந்தது போல, காங்கிரஸ் அரசு இந்த மத்திய அரசு, தொடர்ந்து அப்படியே காத்துக்கொண்டிருக்கிறது. தமிழர்களின் குரல்களையும், உணர்வுகளையும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications