சாத்தான்குளம் அருகே 100 ஏக்கர் நிலம் ஏப்பம்: அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி உண்ணாவிரதம்
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே போலியாக ஆவணம் தயாரித்து நில மோசடி செய்த அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
சாத்தான்குளம் அருகே கருங்கடல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பனைகுளத்தைச் சேர்ந்த அதி்முக பிரமுகர் டேனியல். இவரிடம கேரளாவைச் சேர்ந்த ஜெயசந்திரன் என்பவர் பால்பண்ணை வைக்க வேண்டும் என்று 100 ஏக்கர் நிலம் கேட்டுள்ளார். பேய்குளம், கருங்கடல், செட்டிகுளம், கட்டாரிமங்களம் பகுதியில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை டெனியல், செட்டிகுளம் மாரிமுத்து, பள்ளகிணறு சசிகுமார் ஆகியோர் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்துள்ளனர். இது குறித்த விபரம் சில ஆண்டுகளுக்குப் பின்னர் தான் நில உரிமையாளர்களுக்கு தெரிய வந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பனைகுளம் தாவீது மற்றும் சிலர் கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன்பின் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து பனைகுளம் பஸ் நிறுத்தம் முன்பு தாவீது தலைமையில் ஆழ்வார்திருநகரி யூனியன் கவுன்சிலர் காந்திமதி, கருங்கடல் பஞ்சாயத்து தலைவர் தங்கசெல்வி, உறுப்பினர் தங்க ராணி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த சாத்தான்குளம் தாசில்தார் சங்கரநாராயணன், விஏஓ சத்தியராஜ் உள்ளிட்டவர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை ஒத்தி வைப்பதாக தெரிவித்து கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications