போதைப்பொருள் கடத்தல்: சீனாவில் பாகிஸ்தானியருக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை
ஷாங்காய்: போதைப் பொருள் கடத்திய பாகிஸ்தானியர் செய்யது ஜஹித் ஹுசைன் ஷா என்பவருக்கு விஷ ஊசி போட்டு சீனா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தியதற்காக பாகிஸ்தானியரான செய்யது ஜஹித் ஹுசைன் ஷாவை (35) சீன போலீசார் கைது செய்தனர். அவர் மீதான குற்றம் கடந்த ஆண்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் கைதான 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அதன்படி நேற்று ஷாவுக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஷாவின் மரண தண்டனையை நிறுத்தக் கோரி அவரது குடும்பத்தாரும், மனித உரிமை அமைப்பினரும் சீன அரசை வலியுறுத்தினர். ஷாவைக் காப்பாற்றுமாறு பாகிஸ்தான் அரசையும் கேட்டுக் கொண்டனர். ஆனால் இரண்டு நாட்டு அரசுகளும் எந்த பதிலும் அளிக்கவில்லை.
போதைப் பொருள் குற்றத்திற்காக ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது என்பது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளை மீறுவதாகும் என்று பொதுமன்னிப்பு சபையின் ஆசிய-பசிபிக் தலைவர் சாம் ஜரிபி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசு ஒரு போன் செய்திருந்தால் இந்நேரம் ஷாவின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருக்கும் என்று ஆசிய மனித உரிமை கழகம் தெரிவித்துள்ளது.
ஷாவை செய்யாத குற்றத்திற்காக தண்டித்துள்ளார்கள் என்று அவரது சகோதரி தஸ்னீம் பாத்திமா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications