ஜெ. வாக்குறுதியால் இடிந்தகரையில் உண்ணாவிரதம் வாபஸ்: ராமதாஸ், வைகோ வரவேற்பு
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததையடு்தது தான் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. இதை பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
இது குறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் அளித்த வாக்குறுதியை ஏற்று கூடங்குளம் பகுதி மக்கள் கடந்த 11 நாட்களாக நடத்தி வந்த உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர். 127 பேர் தங்களை வருத்திக் கொண்டு நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியும், மனநிறைவும் அளிக்கிறது. கூடங்குளம் பகுதி மக்கள் தமிழக முதல்வரை நம்பித்தான் தங்களின் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டிருக்கிறார்கள்.
அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அவர்களின் பிரதிநிதியாக தமிழக முதல்வர் செயல்பட்டு, மத்திய அரசுடன் போராடி கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக தமிழக அரசும், போராட்டக் குழுவினரும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பாமக அதன் முழு ஆதரவை அளிக்கும். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளையும் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணுமின்நிலைய போராட்டக் குழுவினரின் கோரிக்கையை ஏற்று, முதல்வர் ஜெயலலிதா, கூடங்குளத்தில் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்கவும், நிரந்தரமாக மூட வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், தமிழக அமைச்சரவையைக் கூட்டி முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.
கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை அமைக்க, ரஷியாவுடன் செய்த ஒப்பந்தத்தை, 1988-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அறிவித்தபோது, அதனை எதிர்த்த ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், இன்று தமிழக முதல்வரின் அறிவிப்பைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அறவழியில், 11 நாட்களாகப் பட்டினி கிடந்து, உயிரைத் தரவும் சித்தமாகப் போராடிய பொதுமக்கள், தாய்மார்கள், குறிப்பாக மீனவ சமுதாயத்துச் சகோதர சகோதரிகளுக்கு தமிழகமே நன்றிக்கடன்பட்டு இருக்கின்றது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications