திருச்சி மேற்கு இடைத்தேர்தல்: கே.என்.நேரு சார்பில் நாளை ஸ்டாலின் மனு தாக்கல்

இந்தத் தொகுதியில் அடுத்த மாதம் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது.
அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பரஞ்சோதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று மனு தாக்கல் செய்தார்.
திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு மறைந்த அதிமுக அமைச்சர் மரியம் பிச்சையிடம் தோற்றவர் நேரு.
இவர் நில அபகரிப்பு வழக்கில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் சிறையில் இருந்தபடியே வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து கே.என்.நேரு சார்பில் மு.க. ஸ்டாலின் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
இதற்கான வேட்பு மனுவில் கே.என்.நேருவிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. மேலும் தனது சார்பில் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்வார் என்ற பரிந்துரை கடிதத்தையும், சொத்து பட்டியல் குறித்த ஆவணத்திலும் நேரு கையெழுத்திட்டு திமுக நிர்வாகிகளிடம் வழங்கியுள்ளார்.
இதையடுத்து கே.என்.நேரு சார்பில் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் அதிகாரியும், ஆர்.டி.ஓ.வுமான சம்பத்திடம் காலை 11 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து உடனடியாக நேருவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்திலும் இறங்கவுள்ளார்.
இதற்காக இன்று திருச்சி வரும் அவர், அங்கு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி. பழனிச்சாமி மற்றும் கட்சியினரை சந்தித்துப் பேசவுள்ளார்.












Click it and Unblock the Notifications