திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் இணைப்பு ரத்து: உயர் நீதிமன்றத்தில் அரசு அப்பீல்
சென்னை: திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பேருராட்சியை (டவுன் பஞ்சாயத்து) இணைத்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து அந்த நீதிமன்றத்திலேயே தமிழக அரசு அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளது.
திருவெறும்பூரை திருச்சி மாநகராட்சியுடன் இணைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு திருவெறும்பூரில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால், மக்களின் எதிர்ப்பையும் மீறி தமிழக அரசு இந்த முடிவை எடுத்தது.
இதை எதிர்த்து திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசந்தர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மக்கள் கருத்தை கேட்காமல் திருவெறும்பூரை திருச்சி மாநகராட்சியுடன் இணைத்தது தவறு. மேலும் இந்த இணைப்பு குறித்த அறிவிப்பாணையை நாளேடுகளில் அரசு வெளளியிடவில்லை. எனவே, இந்த இணைப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூரை இணைத்ததை ரத்து செய்தும், இது தொடர்பான அரசின் உத்தரவு செல்லாது என்று நேற்று முன் தினம் உத்தரவிட்டார்.
இந் நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,
நகராட்சி சட்டத்தின்படி அரசாணை குறித்து பொதுமக்கள் அறியும் வண்ணம் பத்திரிகைகளில் விளம்பரத்தவில்லை என்று கூறி அரசாணையை தனி நீதிபதி ரத்து செய்துள்ளார்.
ஆனால் மாநகராட்சி சட்டம் பிரிவு 461 மற்றும் 463ன்படி நகராட்சி விரிவாக்கம் குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய அவசியம் இல்லை, அரசு கெஜட்டில் அறிவிப்பாணை வெளியிட்டால் போதுமானது.
ஆனால் இந்த சட்டப் பிரிவுகளை கருத்தில் கொள்ள தனி நீதிபதி தவறி விட்டார். ஆகவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளை இணைத்தது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணைகளை செல்லும் என உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு்ள்ளது.
தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோரை கொண்ட முதல் டிவிசன் பெஞ்ச் முன் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, இந்த அப்பீல் மனுவை அவசரம் கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications