உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சிபிஐ வேட்பாளர்கள் தயார்- தா.பாண்டியன்

உள்ளாட்சித் தேர்தல் காட்சிகள் படு சுவாரஸ்யமாக மாறியுள்ளன. திமுக, அதிமுக, பாமக, மதிமுக, தேமுதிக, காங்கிரஸ் என அனைத்து முக்கியக் கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் குழப்பத்தில் உள்ளன.
இடதுசாரிகளுடன் அதிமுக தரப்பில் பேசி வருகின்றனர். ஆனால் எந்த உடன்பாடும் இதுவரை எட்டப்படவில்லை. இந்த நிலையில் தனது நிலை குறித்து முடிவெடுக்க முடியாமல் இரு இடதுசாரி கட்சிகளும் திணறுகின்றன.
இந்தநிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழு ஒன்று முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி தலைமையில் அதிமுகவுடன் இன்று பேசியது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். நாளை உடன்பாடு குறித்து முடிவெடுப்போம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் தேர்தலி்ல போட்டியிட தயார் நிலையில் உள்ளனர் என்றார்.
சிபிஎம் முடிவு என்ன?
இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு குறித்து இதுவரை தெரியவில்லை. ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட சிபிஎம் செயலாளர் முருகேசன் தனது கட்சி குமரி மாவட்டத்தில் 3 நகராட்சித் தலைவர் பதவிகள் மற்றும் 20 பேரூராட்சித்தலைவர் பதவிகளுக்கு போட்டியிடவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் சிபிஎம் தனது நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில்,
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மட்டும் அல்லாமல் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதிகளையும், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளையும் பட்டியலாக கொடுத்துள்ளனர். அ.தி.மு.க. தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்திப்பதா? அல்லது தனித்து போட்டியிடுவதாக என்பது குறித்து முடிவு செய்வோம் என்றார்.
கொஇபே, மூமுமு, மமகவுக்கு சீட் உறுதி?
இதற்கிடையே அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு இளைஞர் பேரவை, மனித நேய மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற முன்னணி ஆகியவற்றின் நிர்வாகிகள் நேற்று அதிமுக தரப்புடன் பேசினர்.
பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும், சுமூக உடன்பாடு எட்டப்படும் என்றும் இவர்கள் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இதன் மூலம் இவர்களுக்கு ஜெயலலிதா ஏதாவது போட்டுத் தருவார் என்பது உறுதியாகியுள்ளது.
சரத்குமார் கதி?
அதேசமயம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு என்ன கிடைக்கும் என்பது தெரியவில்லை. சரத்குமார் கட்சி சார்பில் இதுவரை யாரும் அதிமுகவுடன் பேசியதாக தெரியவில்லை. சரத்குமாரும் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார்.












Click it and Unblock the Notifications