12 நாட்களுக்கு பிறகு கூடங்குளத்தில் இயல்பு நிலை திரும்பியது: மக்கள் மகிழ்ச்சி
வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி நடந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து நேற்று மீனவ கிராமங்களில் இயல்பு நிலை திரும்பியது. அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. 10 ஆயிரம் மீனவர்கள் கடலுககு மீன்பிடிக்கச் சென்றனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை மூடக்கோரி இடிந்தகரையில் கடந்த 12 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதனால் கடலோர கிராமங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. கூடங்குளத்தில் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவில்லை.
முதல்வர் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று நேற்று முன்தினம் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டன.
மாணவர்கள் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர். 10 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு நாட்டுப் படகு, விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். இதனால் கூடங்குளம பகுதியில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.












Click it and Unblock the Notifications