குர்கான் டோல்கேட்டில் வரி கேட்டவர் சுட்டுக்கொலை: சிசிடிவி கேமிராவில் பதிவு
குர்கான்: குர்கான் டோல் கேட்டில் நுழைவு வரி கேட்டவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வெறும் 27 ரூபாய்க்காக இந்த கொடூரக் கொலை நடந்துள்ளது.
டெல்லி- குர்கான் டோல் ரோட்டில் கேர்கி தௌலாவில் ஒரு டோல்கேட் உள்ளது. இந்த டோல்கேட் வழியாக நேற்று அதிகாலை 12. 30 மணிக்கு ஒரு மஹிந்திரா ஸ்கார்பியோ வந்துள்ளது. அப்போது பணியில் இருந்த 22 வயது உமேஷ் அந்த வாகனத்தை நிறுத்தி நுழைவு வரியாக ரூ. 27-ஐ செலுத்துமாறு கூறியுள்ளார்.
அதற்கு அந்த கார் உரிமையாளர் நான் உள்ளூர்க்காரன் வரியெல்லாம் செலுத்த முடியாது. வண்டியைப் போகவிடு என்று மிரட்டியிருக்கிறார். முதலில் மறுத்த உமேஷ் பிறகு அந்த வாகனத்தை அங்கிருந்து செல்ல அனுமதித்துள்ளார்.
இந்த நிலையில், டோல்கேட்டிற்கு வெளியே சென்று ஸ்கார்பியோவை நிறுத்திவிட்டு அதில் இருந்து இறங்கி வந்த ஒருவர் உமேஷுடன் தகராறு செய்துள்ளார். அப்போது அந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து உமேஷை சுட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதில் உமேஷின் கழுத்தில் குண்டு பாய்ந்தது.
அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் டோல்கேட்டில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதை வைத்துக் கொண்டு அந்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து குர்கான் கேர்கி தௌலா காவல் நிலைய அதிகாரி ராஜீவ் குமார் கூறியதாவது,
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளோம். சிசிடிவி கேமராவில் வெள்ளை நிற ஸ்கார்பியோ ஒன்று பதிவாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. உமேஷை சுட்ட சத்தம் அங்கு பணியில் இருந்த மற்றவர்களுக்குத் தெரியவில்லை. அதனால் அது அதிநவீன துப்பாக்கியாக இருக்க வேண்டும் என்றார்.
கேர்கி தௌலாவைச் சுற்றியுள்ள 17 முதல் 28 கிராமங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அடையாள அட்டையை காண்பித்துவிட்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications