அதிமுக வேட்பாளர்கள் மாற்றம்: பாவம்..., மாவட்டச் செயலாளர்கள் மீது பழி விழுகிறது!

அதிமுகவைப் பொறுத்தவரை வேட்பாளர்களை மாற்றுவது புதிதல்ல. இந்தக் கூத்து நடக்காமல் ஒரு தேர்தல் கூட முடிந்ததில்லை. அதுவும் சமீப காலத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படுவதாக உறுதிமொழி தரப்பட்ட தொகுதிகளில் கூட வேட்பாளர்களை நிறுத்திவிட்டு, பின்னர் அவர்களை வாபஸ் பெற்ற 'சர்க்கஸ்' எல்லாம் நடந்துள்ளது.
அதே வழியில் இந்த முறை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முதலில் அறிவிக்கப்பட்ட பல வேட்பாளர்களை அதிமுக தொடர்ந்து மாற்றி வருகிறது.
அதுவும் மற்ற கட்சிகள் விருப்ப மனுக்களைப் பெறுவதே நிறைவடையாத நிலையில், வேட்பாளர்களை அறிவித்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இவ்வளவு வேகமாக வேட்பாளர் பட்டியல் வெளியானபோதே, பத்திரிக்கை அலுவலக எடிட்டர்கள் முதல் ஆபிஸ் பாஸ் வரை எல்லோருமே சொன்ன ஒரு கருத்து, ''இதில் எத்தனை வேட்பாளர்கள் உண்மையிலேயே தேர்தலை சந்திக்கப் போகிறார்களோ'' என்பது தான்.
அதிமுகவைப் பொறுத்தவரை வேட்பாளர் அறிவிப்பும், அதற்குப் பதிலாக ஒரு வேட்பாளரை அறிவிப்பதும், அவருக்கும் பதிலாக இன்னொரு வேட்பாளரை அறிவிப்பதும் புதிதல்ல என்பதால், இந்த முறையும் வேட்பாளர்கள் ஏராளமான அளவில் நிச்சயம் மாற்றப்படுவார்கள் என்று நம்பப்பட்டது. அந்த நம்பிக்கையை வீணாக்காமல் வரிசையாக வேட்பாளர்களை மாற்றி வருகிறார் ஜெயலலிதா.
மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுதான் இந்த வேட்பாளர்கள் மாற்றத்துக்குக் காரணம் என்று அதிமுக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனவாம்.
மாவட்டச் செயலாளர்களே, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பதவிக்கும் மூன்று பேரின் பெயர்களைப் பரிந்துரை செய்து பட்டியல் தருமாறு கட்சித் தலைமை கேட்டிருந்ததாம். இதையடுத்து, தலைமைக்குத் தெரிந்த ஒருவரின் பெயருடன், தங்களுக்கு வேண்டியவர்களின் பெயர்களையும் சேர்த்து மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் அனுப்பியதாகவும்,
மேலும் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அல்லது அந்தப் பகுதி எம்.எல்.ஏவின் வற்புறுத்தல் காரணமாக சிலரது பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றதாகவும், தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அடிப்படையில் சிலரின் பெயர்களை மாவட்டச் செயலாளர்கள் பட்டியலில் சேர்க்காமல் விட்டுவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
இதனால் தான் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு போயஸ் தோட்டத்தில் வந்து கட்சியினர் கலாட்டாவில் ஈடுபடும் அளவுக்கு நிலைமை போனதாகவும் சொல்கிறார்கள். இதனால் தான் முந்தையப் பட்டியலை மறுபரிசீலனை செய்து வேட்பாளர்கள் மாற்றப்படுகின்றனர் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகின்றன.












Click it and Unblock the Notifications