தேர்தல் விதிமுறைகளை மீறிவிட்டார் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளுக்குக் கூடுதல் குடிநீர் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார். அந்த மக்களுக்குக் கூடுதல் குடிநீர் கிடைப்பது மகிழ்ச்சி தான். ஆனால் உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு இந்த அறிவிப்பை முதல்வர் செய்துள்ளார். அது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலா, அல்லவா?
தேர்தல் முடிவு வெளியாகும்வரை அரசின் நலத் திட்டங்களுக்குத் தடை என்றும், தேர்தல் விதிகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
இதைப்போல காவல் துறையிலும், பள்ளிக் கல்வித் துறையிலும் ஏராளமான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். இத்தகைய விதி மீறல்களுக்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
கூடங்குளம் அணுமின் திட்டப் பணிகளை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று பலரும் வேண்டுகோள் விடுத்த பிறகும் அது தொடர்பாக அறிவிப்பு எதுவும் வரவில்லை.
கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய தீர்மானத்தில் கூட அணுமின் நிலையம் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் பயத்தில் இருந்து விடுபடும் வரை திட்டப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டுமென்றுதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
திமுக மகளிர் அணியைச் சேர்ந்த ஒருவர் கொலை வழக்கில் மு.க.ஸ்டாலினைத் தொடர்புபடுத்தி ஆளுங்கட்சி தொலைக்காட்சியில் பிரசாரம் செய்வது தவறு என்று கொலையானவரின் கணவரே சொல்லியிருக்கிறார்.
மு.க.ஸ்டாலினுக்கும், அவரது உதவியாளருக்கும் இந்த வழக்கில் தொடர்பு எதுவும் இல்லை. ஆளுங்கட்சியினர் கொடுத்த வற்புறுத்தலினால் தான் பொய் புகார் கொடுத்தேன் என்றும் உயர்நீதிமன்றத்திலேயே தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சியில் காவல்துறையினர் எந்த அளவிற்கு எதிர்க்கட்சியினர் மீது வழக்கு போடத் தவிக்கிறார்கள் என்பதற்கு இதுவே சரியான உதாரணம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications