நேபாள விமான விபத்தில் 8 தமிழ் நாட்டவர் பலி- கருணாநிதி, தலைவர்கள் வேதனை
சென்னை: நேபாள விமான விபத்தில் திருச்சியைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
நேபாள விமான விபத்தில் 8 தமிழர்கள் உள்பட 19 பேர் பலியானார்கள். இது குறித்து பல்வேறு தலைவர்களும் அதிர்ச்சியும், வேதனையும் வெளியிட்டுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
எவரெஸ்ட் சிகரத்தைச் சுற்றிப் பார்க்க தனியார் விமானத்தில் சென்ற 19 பேர் விபத்தில் பலியான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பலியானவர்களில் 8 பேர் திருச்சியைச் சேர்ந்த கட்டுமானச் சங்க உறுப்பினர்கள் என்பது என் வேதனையை அதிகப்படுத்தியது.
திமுகவைச் சேர்ந்த புதுகோட்டை ரகுபதி, திருச்சி செல்வராஜ் ஆகியோரின் உறவினர்கள் சிலரும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்பது பெரிதும் வேதனை அளிக்கும் செய்தியாகும். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள செய்தியில்,
பருவநிலை காரணமாக நேபாளத்தில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் திருச்சியைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரத்தால் வாடும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிதுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications