நேபாள விமான விபத்தில் உயிரிழந்த 8 தமிழர்களின் உடல்களைக் கொண்டு வர ஜெ. ஏற்பாடு

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேபாளத்தில் 19 சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்ற விமானம் நேற்று காலை சுற்றுலாவை முடித்துவிட்டு காட்மாண்டு விமானநிலையத்தை நோக்கி திரும்பும்போது, மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 8 சுற்றுலாப்பயணிகள் உட்பட விமானத்தில் பயணித்த அனைவரும் அகால மரணம் அடைந்தனர். அகால மரணம் அடைந்தது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக இந்த துயரச்சம்பவத்தில் உயிரிழந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதியை அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் இந்த கோரவிபத்தில் மரணம் அடைந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு, திருச்சிக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள ஏதுவாக இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர்களை நேபாள தலைநகர் காட்மாண்டுக்கு அழைத்துச் செல்லுமாறும், தேவையான உதவிகளை செய்யுமாறும் திருச்சி எம்.பி. ப.குமாருக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினருக்கு அமைச்சர் சிவபதி ஆறுதல்
இதையடுத்து முதல்வர் உத்தரவுப்படி நேற்று மாலை திருச்சி வந்த அமைச்சர் சிவபதி, பலியானோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதலையும், முதல்வரின் இரங்கலையும் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நேபாள விமானம் விபத்தில் பலியான திருச்சியை சேர்ந்த 8 பேரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி வந்துள்ளேன். பலியான 8 பேர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, இரவு 8-15 மணி அளவில் குமார் எம்.பி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி அசோகன் ஆகியோருடன் பலியானவர்களின் குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களும் டெல்லி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கிருந்து இந்திய தூதரகம் மூலம் நேபாள தூதரகத்திற்கு பேசி உடல்களை உடனடியாக தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பலியானவர்களின் குடும்பத்தினர் திங்கள்கிழமை டெல்லி சென்றடைந்ததும் அங்கிருந்து நேபாளம் செல்கின்றனர். அங்கு பலியானவர்களின் உடல்களை அடையாளம் காட்டி, டி.என்.ஏ. சோதனை மேற்கொண்ட பின்பு உடல்களை பெற்றுக் கொண்டு தமிழகம் திரும்புவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications