ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ரப்பானி கொலை வழக்கில் ஒருவர் கைது
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் புர்ஹானுதீன் ரப்பானி கொலை வழக்கில் தாலிபான்களுடன் தொடபுடைய ஹமீதுல்லா அகுந்த் என்பவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் புர்ஹானுதீன் ரப்பானி கடந்த 21-ம் தேதி நடந்த வெடிகுண்டு தாக்குதலில் பலியானார். தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் ரப்பானி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 21-ம் தேதி ரப்பானியின் வீட்டுக்கு வந்த இருவர் தாலிபான்களிடம் இருந்து முக்கியத் தகவல் கொண்டு வந்திருப்பதாகக் கூறி உள்ளே நுழைந்தனர்.
அதில் ஒருவன் ரப்பானியை சந்தித்தவுடன் தலைப்பாகைக்குள் மறைத்து வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்தான். அதில் ரப்பானி பலியானார். இந்த கொலை வழக்கில் தாலிபான்களுடன் தொடர்புடைய ஹமீதுல்லா அகுந்த் என்பவர் காபூலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித்தொடர்பாளர் சிபதுல்லா சபி தெரிவித்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கொலை குறித்து விசாரிக்க ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அப்துல் ரஹிம் வர்தக் தலைமையிலான உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளார்.
அகுந்த் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்கு முந்தைய நாள் தாக்குதலை நடத்தியவரை அகுந்த் தொடர்பு கொண்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரப்பானியைக் கொன்றவனை உடனடியாக கைது செய்யுமாறு அரசியல் கட்சிகளும், பொது மக்களும் கர்சாய் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications