வறுமைக் கோட்டுக்குக் கீழ் வருபவர்கள் யார்? - மாண்டேக் சிங் அலுவாலியா விளக்கம்
பெய்ஜிங்: நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ 32 க்குக் குறைவாகவும், கிராமங்களில் ரூ 26-க்குக் கீழும் தனி நபர் நுகர்வு கொண்ட அனைவரும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வருபவர்களாகக் கருதப்படுவார்கள் என திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.
வறுமைக்கோடு என்பதற்கான அடிப்படை என்ன? அந்த விவரங்களை உடனே தெரிவிக்க வேண்டும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டிருந்தது.
சீனாவில் நடக்கும் இந்திய - சீனா பொருளாதார பேச்சுக்களில் பங்கேற்கச் சென்றுள்ள மாண்டேக் சிங் அலுவாலியாவிடம், இந்திய நிருபர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அலுவாலியா, "உச்சநீதி மன்றம் கேட்ட விவரங்களை திட்டக் குழு ஏற்கெனவே கொடுத்துவிட்டது. ஒரு இந்தியனின் தனி நபர் நுகர்வு சராசரியாக நாளொன்றுக்கு ரூ 32-க்கு குறைவாக இருந்தால் அவர் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவராகக் கருதப்படுவார். இது நகர்ப்புறத்துக்குதான். கிராமப் புறங்களில் ரூ 26 ஆக தனி நபர் நுகர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது (இது தனி நபர் வருவாய் அல்ல. ஒரு நாளைக்கு ரூ 32 மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்களை பயன்படுத்துவதுதான் தனி நபர் நுகர்வு).
ஆனால் ஏழைகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த இந்த அளவுகோல் பொருந்தாது.
வறுமைக்கோட்டுக்கான இந்த வரையறை, அதை நிச்சயிக்க நியமிக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் கமிட்டியின் பரிந்துரையாகும். இது ஒரு குடும்பத்தின் நுகர்வு அல்ல. குடும்பத்தில் உள்ள தனிநபர்களின் நுகர்வு அளவீடு என எடுத்துக் கொள்ள வேண்டும். இதன்படி பார்த்தால், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். ஆனாலும் அரசு இந்தப் பரிந்துரையை அப்படியே ஏற்கிறது," என்றார்.












Click it and Unblock the Notifications