திருச்சி இடைத்தேர்தல்: கே.என். நேரு வேட்பு மனு ஏற்பு!
திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் சிறையில் இருந்தபடியே திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுவிட்டது.
அக்டோபர் 13ம் தேதி நடக்கும் இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் பரஞ்சோதியும், திமுக சார்பில் திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு போட்டியிடுகின்றனர்.
நிலம் அபகரிப்பு தொடர்பான வழக்கில் கே.என்.நேரு கைதாகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் திருச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து வாங்கிச் செல்லப்பட்ட வேட்பு மனு விண்ணப்பப் படிவத்தை வழக்கறிஞர்கள் சிறைக்கு கொண்டு சென்று நேருவிடம் கையெழுத்து பெற்றனர்.
பின்னர் கே.என்.நேரு சார்பில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 23ம் தேதி தேர்தல் அதிகாரி சம்பத்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதில் கே.என்.நேருவின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. அதேபோல அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி வேட்பு மனு உள்பட 17 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் 13 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற செப்டம்பர் 29ம் தேதி கடைசி நாளாகும்.
நாம் அனைவரும் வேட்பாளர்கள்-ஸ்டாலின்:
இந் நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் கலைஞர் அறிவாலயத்தில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் ஸ்டாலின் பேசுகையில்,
திமுகவினருக்கு திருச்சி மாவட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. திமுக தலைவர் கருணாநிதி இந்த மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் தான் முதன்முதலாகப் போட்டியிட்டார்.
இங்கு என்னுடைய நெருங்கிய நணபர் பொய்யாமொழி போட்டியிட்டு வெற்றி பெற்று இளம் வயதிலேயே உயிரிழந்தார். அப்போது இடைத்தேர்தல் வந்தது. அவருடைய தம்பி அன்பில் பெரியசாமி போட்டியிட்டார். அந்த இடைத்தேர்தலில் இங்கேயே 10 நாள் தங்கியிருந்து தேர்தல் பணியை செய்தேன். அந்த வகையில் திருச்சிக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
முதலில் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று தான் தலைவர் சொன்னார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாகி அமைச்சராகி அவர் பொறுப்பை ஏற்கும் முன்பே அகால மரணம் அடைந்தார்.
அந்த இடத்திற்கு அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரையாவது அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தியிருந்தால், திமுக கட்டாயம் வேட்பாளரை நிறுத்தியிருக்காது. ஆனால் வேறொருவரை அதிமுக தேர்தலில் நிறுத்தியிருக்கிறது. இதனால் திமுக கட்டாயம் இந்தத் தேர்தலில் வெற்றி பெறும்.
இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தல் அல்ல. திமுகவை ஒழிக்க வேண்டும், திமுகவினரை கொடுமைப்படுத்த வேண்டும், முக்கியத் தலைவர்களை எல்லாம் சிறை வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு போலீசாரை ஏவிவிடும் அராஜக ஆட்சிக்கு ஒரு சவுக்கு அடி கொடுக்க இந்தத் தேர்தலில் நம்முடைய வெற்றி அமைய வேண்டும்.
திமுக வேட்பாளர் கே.என்.நேருவுக்கு, மக்களை சந்திக்க நீதிமன்றம் அனுமதி கொடுக்கிறதோ, கொடுக்காதோ தெரியாது. ஆனால், இந்தத் தேர்தலில் நாம் அனைவரும் வேட்பாளர் தான். அதை மனதில் வைத்து தேர்தல் பணியைச் செய்வோம், வென்று காட்டுவோம்.
முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.கவை அழிக்க நினைக்கிறார். தி.மு.கவை அழிக்க நினைத்தவர்கள்தான் இதுவரை அழிந்து போயுள்ளனர் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications