சிங்கூர் நிலம்: மம்தா அரசின் சட்டம் செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
கொல்கத்தா: சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பி அளிக்கும் மேற்குவங்க அரசின் சட்டம் செல்லும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
அதே நேரம், டாடா நிறுவனம் நஷ்டஈடு கோரி மாவட்ட நீதிமன்றத்தில் விண்ணபிக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் முந்தைய கம்யூனிஸ்ட் ஆட்சியின்போது சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலை அமைப்பதற்காக பல நூறு ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
ஆனால் இந்த நில கையகப்படுத்தலுக்கு விவசாயிகள் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி பெரும் போராட்டம் நடத்தியதால், தனது புதிய கார் தொழிற்சாலை திட்டத்தை குஜராத் மாநிலத்துக்கு டாடா நிறுவனம் மாற்றிக் கொண்டது. எனினும், சிங்கூரில் கையகப்படுத்தப்பட்ட நிலம், டாடா நிறுவனம் வசமே இருந்தது.
மேற்கு வங்கத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற மம்தா பானர்ஜி, சிங்கூர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடமே திருப்பி அளிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றினார்.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளுக்கு திருப்பி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
விசாரணையின் முடிவில், சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பி அளிக்கும் மேற்குவங்க அரசின் சட்டம் செல்லும் என கோல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு டாடா நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications