துப்பாக்கிச்சூடு: நீதிபதி சம்பத் விசராணைக்கு எதிராக வாயில் கறுப்புத் துணி கட்டி நூதன போராட்டம்
மதுரை: பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் நீதிபதி சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மள்ளர் கழகத்தினர் வாயில் கறுப்புத் துணி கட்டியிருந்தனர். இது தவிர துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களும் வாயில் கறுப்புத் துணி கட்டியிருந்தனர்.
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளான கடந்த 11-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர். 17 பேர் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் பாண்டி, ஆறுமுகம் ஆகியோர் மதுரை பெரிய மருத்துவமனையிலும், சிவா, குமார், சிங்கத்துரை ஆகியோர் உயர் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் குணமடைந்து வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
இதற்கிடையே இந்த துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க தமிழக அரசு நீதிபதி சம்பத் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. நீதிபதி சம்பத் நேற்றுமுன்தினம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினார். கலவரத்தில் காயம் அடைந்த போலீசார், மாவட்ட கலெக்டர் அருண் ராய் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு காளிராஜ் மகேஷ்குமார் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினார்.
பின்னர் நிருபர்களை சந்தித்த அவர் கூறுகையில், பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணை நடுநிலையோடும், நியாயமாகவும் நடக்கும். தற்போது முதல் கட்ட விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அரசு உத்தரவிட்டப்படி 2 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்பிக்கப்படும். கடந்த 2 நாட்களாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகள் கேட்கப்பட்டன என்றார்.
இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவா, குமார், சிங்கத்துரை ஆகியோரிடம் விசாரணை நடத்த அங்கு சென்றார். அப்போது சிபிஐ விசாரணை கோரியும், நீதிபதி சம்பத் குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மருத்துவமனைக்கு முன்பு மள்ளர் கழகத்தின் மாநில பொருளாளர் சோலை பழனிவேல்ராஜன் தலைமையில் 8 பேர் வாயில் கறுப்புத் துணி கட்டியிருந்தனர்.
மருத்துவமனைக்குள் சென்றோபது அங்கு சிகிச்சை பெற்று வரும் மூவரும் நீதிபதி சம்பத் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் கறுப்புத் துணி கட்டியிருந்தனர். நீதிபதி எவ்வளவோ முயன்றும் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
துப்பாக்கிச்சூட்டை கண்டித்து உண்ணாவிரதம்: அனுமதி கோரி மனு
தேனி மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் பாலு மகேந்திரன் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து தேனி பகவதி அம்மன் கோயில் மைதானம் அல்லது கனரா வங்கி அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு எஸ்.பி.யிடம் மனு அளித்தோம். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் விதி நடத்தையில் இருப்பதால் உண்ணாவிரதத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக் கூறி அனுமதி வழங்க எஸ்.பி மறுத்துவிட்டார் என்று அவர் அதி்ல் தெரிவித்திருந்தார்.
இதேபோன்று மதுரை தல்லாகுளம் தமுக்கம் மைதானம் அருகே தர்ணா போராட்டம் நடத்த பகுஜன் சமாஜ் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் நடத்த அனுமதி கோரி அக்கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் குரு விஜயன் மனு தாக்கல் செய்தார்.
மேலும், மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே தர்ணா போராட்டம் நடத்த அனுமதி கோரி ஆதி தமிழர் பேரவையினரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த 3 மனுக்கள் நீதிபதி சுதாகர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில ஆஜரான வழக்கறிஞர் கோவிந்தன் கூறியதாவது, உள்ளாட்சித் தேர்தல் விதி தற்போது அமலில் உள்ளது. அதனால் ஆர்ப்பாட்டம், தர்ணா, பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது. அனுமதி கொடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றார்.
அதற்கு நீதிபதி கூறுகையில், பேரணி நடத்தினால் தானே பிரச்சனை வரும். உண்ணாவிரதத்திற்கு அனுமதி கொடுக்கலாம். ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்தில் நடத்தாமல் அனைவரும் சேர்ந்து ஒரே இடத்தில் நடத்தலாம். எந்த இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கலாம் என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.
இதற்கிடையே பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 6 பேரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற அனுமதி கோரும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியனின் மனு நீதிபதி பாலா முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் விசாரணையை வரும் அக்டோபர் மாதம் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications