புலி சைவமாக மாறியதைப் போல பழைய திமிரில் பேசுகிறார் அழகிரி-செல்லூர் ராஜு
மதுரை: தி.மு.க. ஆட்சியில் பல்வேறு காலக் கட்டங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்தது மு.க.அழகிரி தான். ஆனால் இப்போது புலி சைவமாக மாறியதை போல அவர் பழைய திமிரில் பேசியுள்ளார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது, மதுரையில் அ.தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்த போது நடந்த சில சம்பவங்களை சுட்டிக் காட்டி மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அதிமுக-வினர் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படுவதை போல ஒரு மாயை தோற்றத்தை உருவாக்கி பேசியுள்ளார்.
தி.மு.க. வேட்பாளர் மனு தாக்கலின் போது தேர்தல் அதிகாரியிடம் உங்களை தனியாக சந்திக்க வேண்டும் என்று அதிகார தோரணையில் மிரட்டி உள்ளார். இந்த செயலுக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவிக்கின்றது.
மதுரை நகரில் சுவர் விளம்பரங்களை தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர் -தான் வரைந்துள்ளனர். ஏற்கனவே நடந்த திமுக ஆட்சியில் பல்வேறு கால கட்டங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்தது மு.க.அழகிரி தான். ஆனால் இப்போது புலி சைவமாக மாறியதை போல அவர் பழைய திமிரில் பேசியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளின் போது எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களை காட்டி இது தேர்தலுக்காக எழுதப்பட்டதாக மு.க. அழகிரி பொய் புகார் கூறியுள்ளார். தி.மு.க. ஆட்சியில் மதுரை மக்களை கொள்ளையடித்து சுரண்டி பல்வேறு சமூக விரோத செயல்களை செய்த மு..க.அழகிரியும் அவரது கூட்டாளிகளும் தற்போது நல்லவர்களை போல நடித்து வருகின்றனர்.
ஒருமுறை கூட பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை பேசாத மு.க.அழகிரி அ.தி.மு.க.வினர் மீது குறை கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு கிடைத்த வெற்றி, உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.விற்கு கிடைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications