மாயமான சிறுவனை கொலை செய்து கிணற்றில் வீசியவர் கைது
திசையன்விளை: நெல்லையில் சிறுவன் மாயமான வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் சிறுவனை கொலை செய்து கிணற்றில் வீசியதாக தெரிவி்த்துள்ளார்.
நெல்லை மாவட்டம், திசையன்விளை அடுத்த பெரியவிளை கிராமத்தை சேர்ந்தவர் லிங்கராஜ். காய்கறி வியாபாரி இவரது 2வது மகன் அன்புசெல்வன் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 2ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலையில் வெளியே சென்ற அன்புசெல்வன், இரவு நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. நேற்று காலை வரை சிறுவன் அன்புசெல்வன் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சியடைந்த லிங்கராஜ் குடும்பத்தினருடன் சேர்ந்து தேடி விசாரித்தனர்.
அப்போது அதே ஊரை சேர்ந்த புதுமாப்பிள்ளை சிறுவன் அன்புசெல்வனை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து லிங்கராஜ் திசையன்விளை போலீசாரிடம் புகார் அளித்தார். அதில் சிறுவன் அன்பு செல்வன் மாயமானதில் நடராஜன் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் நடராஜிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுவன் அன்பு செல்வனை ஏமாற்றி அழைத்து சென்று நாடார் அச்சம்பாடு முத்தாரம்மன் கோவில் கிணற்றில் வீசி கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து வள்ளியூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இனஸ்பெக்டர்கள் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு கிணற்றுக்குள் சிறுவன் அன்புசெல்வன் பிணமாக கிடந்தான். பின்பு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு சிறுவனின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications