தமிழக மின் தடையை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை: ராமதாஸ்
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடையை போக்க, முதல்வர் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும், என பா.மா.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள மின்தடை அதிகரித்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்தடையும் ஆங்காங்கே அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட முக்கிய காரணங்களில் மின்தடையும் ஒன்று. எனவே தற்போது அமலில் உள்ள மின்தடையை போக்க மத்திய மின் தொகுப்பில் இருந்து, மின்சாரத்தை பெற்று தர வேண்டும். ஏற்கனவே மத்திய அரசிடமிருந்து 1000 மெகாவாட் மின்சார வழங்குமாறு, பிரதமருக்கு கடிதம் எழுதியதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.
மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைத்திருந்தால், தற்போது தமிழகத்தில் மின் தடையே இருக்க வாய்ப்பில்லை. தமிழககத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதாக அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கான நடவடிக்கை எதுவும் எடுத்துள்ளதாக தெரியவில்லை. பண்டிகை காலம் நெருங்கியுள்ளதால், தமிழகத்தில் மின்தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்தில் உள்ள மின்தடையை போக்க, போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications