கூடங்குளம் விவகாரம்: 9-ம் தேதி அடையாள உண்ணாவிரதம்
வள்ளியூர்: வரும் 7-ம் தேதிக்குள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிகளை நிறுத்தாவிட்டால் வரும் 9-ம் தேதி அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் கூடங்குளம் அணுமின் நிலையமும், ஆபத்தும் என்பது குறித்து கருத்தரங்கம் நடந்தது.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், மீனவ அமைப்பு செயலாளர் புஷ்பராயன், மைபா, வழக்கறிஞர் சுப்பிரமணியன், கேரள மாநில அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த தேசிய மீனவர் பேரவை செயலாளர் பீட்டர், விஞ்ஞானி சுரேந்திர வடகேர், சுரேந்திர நாத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த அணுசக்தி எதிர்பாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தேசிய மீனவர் பேரவை செயலாளர் பீட்டர் பேசும்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடுவதற்காக நடத்தப்படும் அனைத்து போராட்டங்களுக்கும் துணை நிற்போம். கூடங்குளம் அணுமின் நிலையத்தால் கேரளாவுக்கும் பாதிப்பு உள்ளது. எனவே, இந்த அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி கேரள அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற செய்வோம் என்றார்.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேசுகையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்த பணிகளும் நடக்கக் கூடாது என தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் அதை மதிக்காமல் அங்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. அணுமின் நிலையத்தில் எவ்வித பணிகளும் நடைபெறக் கூடாது. அணுமின் நிலையத்தை மூடும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
மேலும் வரும் 7-ம் தேதிக்குள் மத்திய அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிகளை நிறுத்தாவிட்டால் 9-ம் தேதி அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படும். அப்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications