இந்தியா-பாக். ஒற்றுமைக்காக காந்தியின் படத்தை ரத்தத்தால் வரைந்த பாகிஸ்தானியர்
டெல்லி: மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி ஒரு பாகிஸ்தானியர் தனது ரத்தத்தால் வரைந்த காந்தி படத்தை மகாத்மாவின் பேத்தியிடம் கொடுத்தார்.
காந்தி ஜெயந்தி நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள லாகூரைச் சேர்ந்த அப்துல் வசீல் என்பவர் காந்தி ஜெயந்தியை கொண்டாட டெல்லி வந்தார். அவர் தனது ரத்தத்தால் வரைந்த காந்தி படத்தை கொண்டு வந்திருந்தார்.
இது குறித்து வசீல் கூறியதாவது,
நமக்குள் இருக்கும் விரோதங்களை மறந்து இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்த இது தான் சிறந்த வழி என்று நினைத்து வரைந்தேன்.
மகாத்மா அஹிம்சையை போதித்தார் என்பதை நன்கு அறிவேன். இனி இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளில் யாரும் ரத்தம் சிந்தக்கூடாது என்பதற்காகத் தான் நான் ரத்தத்தால் காந்தியின் படத்தை வரைந்தேன்.
எனது ஓவியம் மக்கள் மனதைக் கரைக்கும் என்று நம்புகிறேன். எனது மனதில் மகாத்மாவின் உருவம் இருந்தது. அதை படமாக வரைய வேண்டும் என்று விரும்பினேன் என்றார்.
பெயிண்டர் பாபு என்று அழைக்கப்படும் வசீல், லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் தெருவில் ஒரு சிறிய கடை வைத்து நடத்தி வருகிறார். காந்தியின் படத்தை வரைய தனது நரம்பில் இருந்து ஊசி மூலம் ரத்தத்தை எடுத்திருக்கிறார். அவர் இந்த படத்தை கடந்த 2009-ம் ஆண்டு வரைந்துள்ளார்.
முன்னதாக அவர் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ, நெல்சன் மண்டேலா ஆகியோரது படங்களையும் ரத்தத்தால் வரைந்துள்ளார்.
வசீல் தான் வரைந்த காந்தியின் படத்தை மகாத்மாவின் பேத்தி தாரா காந்தி பட்டாசார்ஜியிடம் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications