முன்னாள் திமுக அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வம், உறவினர் வீடுகளில் ரெய்டு!

முன்னாள் திமுக அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் என்று அதிரடி சோதனை நடத்தினர். கடலூர், சிதம்பரம் மற்றும் சென்னையில் உள்ள அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்கள் குவித்ததாக பன்னீர் செல்வம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு கடலூர் மாவட்டம் முட்டத்தில் உள்ள பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
அதேபோல சிதம்பரத்தில் உள்ள பன்னீர் செல்வத்தின் அக்காள் மங்கையர்க்கரசி வீட்டிலும் சோதனை நடந்தது. இவர் சிதம்பரம் நகராட்சியில் துணை தலைவராக இருக்கிறார். இவரது வீட்டுக்கு அருகில் உள்ள இன்னொரு சகோதரியான மணிமேகலை வீட்டிலும் போலீஸார் சோதனை நடத்தினர்.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள பன்னீர் செல்வம் வீட்டிலும் ரெய்டு நடந்துள்ளது. காட்டுமன்னார்குடியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றும் சோதனைக்குள்ளானது. அதேபோல வடலூரில் உள்ள உறவினர் சிவக்குமார் வீடு, காட்டுமன்னார்குடியில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மயிலாடுதுறையில் உள்ள பன்னீர் செல்வத்தின் இன்னொரு சகோதரியான மஞ்சுளா வீடு, சித்தப்பா தெய்வசிகாமணி வீடு ஆகியவற்றிலும் ரெய்டு நடந்துள்ளது.
10 குழுக்களாகப் பிரிந்து இந்த சோதனைகளில் போலீஸார் ஈடுபட்டனர்.
முன்னாள் திமுக அமைச்சர் தா. மோ. அன்பரசனின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட சில நாட்களிலேயே பன்னீர் செல்வத்தின் வீட்டில் சோதன நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த திமுக ஆட்சியில் பன்னீர் செல்வம் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். கடலூரில் முக்கிய நிர்வாகி. கடந்த சட்டசபை தேர்தலில் கடலூரில் உள்ள குறிஞ்சிப்பாடியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனிடம் தோல்வி அடைந்தார்.
கடந்த மாதம் தான் நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் கல்வி அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டார். முன்னாள் திமுக அமைச்சர்கள் வீரபாண்டி எஸ். ஆறுமுகம். கே. என். நேரு, என். கே. கே. பி. ராஜா ஆகியோரும் நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications