கூடங்குளம் திட்டம் நிறைவேற ஆதரவு கொடுங்கள்! - ஜெயலலிதாவுக்கு பிரதமர் கடிதம்

இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் எழுதியுள்ள கடிதம்:
"அணுசக்தி மின்சாரத்தை பயன்படுத்துவதற்காக, தொழில் நுட்ப ரீதியாகவும், அவசர கால நிலைமையை சமாளிக்கவும், மத்திய அரசு மிக உயரிய தரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. நமது மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது.
கூடங்குளம் பகுதி மக்களுடன் இந்திய அணுசக்தி கழக நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. கல்வி, சாலைகள், குடிதண்ணீர், சுகாதாரம் மற்றும் சமுதாய பணிகள் அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. உள்ளூர் அதிகாரிகளும் இந்த முயற்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உள்ளனர்.
பாதுகாப்பு குறித்த மறு ஆய்வுக்கு உத்தரவு
ஜப்பானில் புகுஷிமா அணுமின் நிலைய விபத்துக்குப்பின் உள்ளூர் மக்களின் கவலையை போக்குவதற்காகவும், கூடங்குளம் அணு உலைக்கு செய்யப்பட்டுள்ள உயரிய பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை இந்திய அணுசக்தி கழகம் சார்பில் தொடங்கப்பட்டது.
புகுஷிமா விபத்தை தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்யவும் உத்தரவு பிறப்பித்து இருந்தேன். இதன்மூலம் அவசர கால நெருக்கடிகளை நம்மால் திறமையாக சமாளிக்கமுடியும் என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
மறு ஆய்வின்போது அளிக்கப்பட்ட அனைத்து பரிந்துரைகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மத்திய அரசு சார்பில் 'அணுசக்தி பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய சட்ட மசோதா-2011' பாராளுமன்ற மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த ஆணையம் தற்போது உள்ள அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தை உள்ளடக்கியதாக செயல்படும். இந்த ஆணையம், அறிவியல் அணுகுமுறை, அனுபவம் மற்றும் சிறந்த நடைமுறைகள் மூலம் உயரிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும்.
நிறைவேற ஆதரவு தாருங்கள்
பெரிய அளவில், வேகமாக பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் இந்தியா போன்ற நாடுகளில், சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக நமது தேசிய நலன் கருதி அணுசக்தி உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களிலும் இருந்து மின்சக்தியை பெற வேண்டிய நிலைமை உள்ளது.
இந்த நிலையில், கூடங்குளம் அணுமின்நிலையம் உரிய நேரத்தில் செயல்படுவதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்'', என்று அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications