வழக்கறிஞரை தாக்கிய காவல்துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்
கோவை: துடியலூர் போலீஸ் நிலையத்தில் வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனை தாக்கிய காவல்துறை அதிகாரிகளை உடனே கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவையில் வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரன் தனது கட்சிக்காரரின் வழக்கு சம்பந்தமாக துடியலூர் காவல் நிலையம் சென்று அங்குள்ள காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.
அவருக்கு காவல்துறை அதிகாரி முறையான பதிலளிக்காமல், காவல்துறை உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உள்ளிட்ட 5 காவலர்கள் ஆனந்தீஸ்வரனை லத்தி மற்றும் ஹாக்கி மட்டையால் தாக்கியதோடு, பூட்ஸ் காலாலும் மிதித்துள்ளனர். இதனால், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனந்தீஸ்வரன் தாக்கப்பட்ட தகவல் அறிந்த வழக்கறிஞர்கள் துடியலூர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், காவல்துறை அதிகாரிகள் 5 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துடியலூர் காவல்துறை அதிகாரிகளின் அத்துமீறிய இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனை தாக்கிய உதவி ஆய்வாளர், தலைமைக்காவலர் உள்ளிட்ட 5 தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications