அதிமுக ஆட்சியில் தான் சட்டம்-ஒழுங்கு மகா மோசம்: பிரேமலதா

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களுக்காக தனது கணவருக்கு இணையாக பிரேமலதாவும் தமிழகம் முழுவதும் பயணம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஊட்டியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர்,
இந்தத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் போட்டியிடுவது அதிமுகவுக்குத் தான் நஷ்டம், தேமுதிகவுக்கு அல்ல.
கடந்த ஆட்சியைவிட இந்த ஆட்சியில் தான் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாகி விட்டது.
திமுக மற்றும் அதிமுக ஆட்சியிலும், ஊழல் நடந்திருக்கிறது. காங்கிரஸ் அரசிலும் ஊழல் நடந்திருக்கிறது. ஆனால், எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதது தேமுதிக மட்டும் தான். கூடங்குளம் பிரச்சனையில் முதலில் அக்கறையாக செயல்பட்டது கேப்டன் விஜயகாந்த்தான்.
அதிமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு குறையும் என்றனர். ஆனால் மின்சாரப் பிரச்சனை இன்னும் அப்படியே நீடிக்கிறது. அரசு கேபிள் டி.வியிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்றார்.
ஆட்சின்னா அது எம்ஜிஆர் ஆட்சிதான்:
முன்னதாக ஈரோட்டில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, எம்.ஜி.ஆர். மட்டுமே தமிழகத்தில் பொற்கால ஆட்சியைக் கொடுத்தவர். அவரைத் தவிர வேறு யாருமே அப்படிப்பட்ட ஆட்சியைத் தரவில்லை என்றார்.
அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் விரும்பினார். அதனால் தான் ஊழல் புகாரில் சிக்காத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
வாக்காளர்களே ஓட்டு போடும்போது ஒருமுறை சிந்தியுங்கள். உங்கள் ஓட்டு ஈரோடு மாநகராட்சியின் முன்னேற்றத்திற்கு உதவி செய்யுமா? என்று சிந்தித்து பார்த்து ஓட்டுபோடுங்கள்.
லஞ்சம், ஊழல் இல்லாத உள்ளாட்சி அமைய வேண்டுமானால் நீங்கள் தேமுதிக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்.
தேமுதிக சுயமாக தொடங்கப்பட்ட கட்சி. எம்.ஜி.ஆர். சிறப்பான ஆட்சி நடத்தினார். அதுதான் பொற்கால ஆட்சி. ஆனால் அதைபோன்ற ஒரு ஆட்சியை யாரும் கொடுக்கவில்லை என்றார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications