அமைச்சர் சின்னையா வீடு அருகே அடுத்தடுத்து 7 கடைகளில் பணம், பொருட்கள் கொள்ளை
சென்னை: தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் டி.கே.எம். சின்னையாவின் வீட்டுக்கு வெகு அருகே அடுத்தடுத்து 7 கடைகளின் பூட்டை உடைத்த திருடர்கள் அங்கிருந்து பணம், பொருள் உள்ளிட்டவற்றை சூறையாடியுள்ள செயல் சென்னை தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகரான தாம்பரத்தில் உள்ள பாரத மாதா தெருவில்தான் இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. இந்த தெருவில்தான் அமைச்சர் சின்னையா வசித்து வருகிறார். இவரது வீட்டை ஒட்டி உள்ள 7 கடைகளில் நேற்று இரவு சிலர் பூட்டை உடைத்து பணம், பொருள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
அமைச்சர் வீட்டுக்கு அருகேயே நடந்த இந்த துணிகர திருட்டால் தாம்பரம் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்களில் சமீப காலமாக வழிப்பறி, சங்கிலிப் பறிப்பு, வீடுகளை உடைத்துத் திருடுதல், கொலை என குற்றச் செயல்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் அமைச்சரின் வீட்டுக்கு அருகேயே நடந்துள்ள இந்த திருட்டுச் செயல் மக்களின் அதிருப்தியை மேலும் அதிகரிக்கச் செய்வதாக உள்ளது.












Click it and Unblock the Notifications