இனி கட்சி அங்கீகாரம் பெற 8 சதவீத ஓட்டு மட்டும் போதும்: தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி
டெல்லி: மாநில கட்சிகளின் அங்கீகாரத்திற்கு 8 சதவீத ஒட்டுகள் போதுமானது என தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது. இந்த முடிவை தேர்தல் ஆணையம் எப்போதோ எடுத்திருந்தால் இன்னேரம் தேமுதிகவுக்கு முன்கூட்டியே அங்கீகாரம் கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் போட்டியிடும் மாநில கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்க, 6 சதவீத ஓட்டுகளை பெற்று, சில இடங்களில் வெற்றியும் பெற வேண்டும் என தற்போது விதிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விதிமுறையால் ஓட்டுக்களை வாங்கியும் கூட வெற்றி கிடைக்காததால், அங்கீகாரம் பெறமுடியாமல் தேமுதிக போன்ற கட்சிகள் தவித்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது இந்த விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறியிருப்பதாவது, கடந்த தேர்தலில் 6 சதவீதம் ஓட்டு எண்ணிக்கையும், சில இடங்களில் வெற்றியும் பெற்ற ஒரு மாநிலக் கட்சிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனால், ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெறவிட்டாலும் சில கட்சிகள் 8 முதல் 10 சதவீத ஓட்டுகளை பெற்று இருந்தன.
அந்த கட்சிகளுக்கு தற்போது உள்ள விதிமுறைகளின்படி அங்கீகாரம் வழங்க முடியவில்லை. நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளின் கருத்துகளின் அடிப்படையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மாநில கட்சிகளின் அங்கீகாரத்திற்கு 6 சதவீத வெற்றி தேவை என்பதை 8 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. ஆனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இல்லை. தேர்தலில் பதிவாகும் மொத்த ஓட்டுகளில், ஒரு மாநிலக் கட்சிக்கு 8 சதவீதம் ஓட்டுகள் கிடைப்பதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது, என்றார்.












Click it and Unblock the Notifications