பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் குப்பை தொட்டிக்கு சென்றிருக்கும்- ராமதாஸ்
மயிலாடுதுறை: உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் பாமக போட்டியிடாத இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு பாமகவினர் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்திக்கு ரூ.200 கோடி மதிப்புடைய சொத்துக்களை தாரைவார்த்துக் கொடுத்திருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அதற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் நிலவும் கடும் மின் தட்டுப்பாடு காரணமாக பம்பு செட்டை நம்பி விவசாயம் செய்யும் விவாசயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சித்தேர்தலில் பாமக போட்டியிடாத இடத்தில் விடுதலை சிறுத்தைக் கட்சி போட்டியிட்டால் ஆதரிப்போம். விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிடாத இடத்தில் நியாயமான சுயேட்சை வேட்பாளர்களை ஆதரிப்போம்.
மாநிலத் தேர்தல் ஆணையம் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கிய நாளிலிருந்தே மாநில தேர்தல் ஆணையம் நடுநிலையாக இல்லை.
உள்ளாட்சித் தேர்தலில் அடையாள அட்டை இல்லாவிட்டால் ரேஷன் கார்ட். பாஸ்போர்ட் உள்ளிட்ட 15 ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தேர்தலில் முறைகேடுகளை வழிவகுக்கும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் திராவிடக் கட்சிகளுக்கு பாமகவின் ஆதரவு கிடையாது. கடந்த திமுக ஆட்சியில் 40 பேரும், அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற 5 மாதங்களில் 8 பேரும் போலீஸ் காவலில் கொல்லப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம் குப்பை தொட்டிக்கு சென்றிருக்கும். முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இதே பாணியைதான் கடைப்பிடித்தார். எனவே தமிழக அரசு கடுமையான நிலைப்பாடு எடுத்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications