தமிழகத்தில் எல்லா தேர்தல்களிலும் இனி காங்கிரஸ் தனித்தே போட்டி-தங்கபாலு
உள்ளாட்சி தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தங்கபாலு வெளியிட அதை மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, ராஜீவ்காந்தி நமது நாட்டுக்கு தந்த உன்னதமான திட்டம் பஞ்சாயத்து ராஜ். மற்ற மாநிலங்களில் பஞ்சாயத்து ராஜ் முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
மத்திய, மாநில அரசுகளைப்போல பஞ்சாயத்து அமைப்புகளும் தனி அதிகாரம் பெற்றவை. மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு அமைச்சருக்குரிய அந்தஸ்து உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் உள்ளாட்சி அதிகாரங்களை அதிகாரிகளே வைத்து இருக்கிறார்கள்.
இதனால் மக்களுக்கு முழுமையான அதிகாரம் கிடைக்கவில்லை. மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் தமிழக காங்கிரஸ் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதால் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளோம்.
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தனித்து போட்டியிட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து உள்ளனர். இனி வரும் காலங்களில் பஞ்சாயத்து தேர்தல் முதல் நாடாளுமன்றம் தேர்தல் வரை காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும்.
திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி தர்மத்தை காப்பதற்காக காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்றார்.