கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடினால் தமிழக வளர்ச்சி பாதிக்கப்படும்- ஜெ.வுக்கு பிரதமர் பதில்
டெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்பட்டால் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கூடங்குளம் பணிகள் தொடர ஆதரவு கேட்டு தமிழக முதல்வருக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதனால் மின்சாரத் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு தான் போகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2 உலைகளின் மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அதில் 925 மெகாவாட் தமிழகத்தி்ற்கு கொடுக்கப்படும். ஒருவேளை இந்த திட்டத்தை கைவிட்டால் அதனால் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும்.
அணுசக்தி மின்சாரத்திற்காக மக்களின் பாதுகாப்பை காற்றில் பறக்கவிடமாட்டோம். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும். கூடங்குளம் மக்களின் கவலை எங்களுக்கு புரிகிறது. அவர்களின் அச்சத்தைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அப்பகுதி மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்பாதாரத்திற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் விவகாரம் தொடர்பாக மன்மோகன் சிங் ஜெயலலிதாவுக்கு கடந்த 4 நாட்களில் எழுதியுள்ள இரண்டாவது கடிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரை போராடப்போவதாக போராட்டக்குழு அறிவித்துள்ள நிலையில் பிரதமர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications