நான் உங்களில் ஒருத்தி: கூடங்குளம் மக்களிடம் ஜெயலலிதா!
தூத்துக்குடி: கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரத்தில் உள்ளூர் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து செயல்படுவேன், நான் உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று தூத்துக்குடி மற்றும் நெல்லையில் பிரசாரம் செய்தார்.
தூத்துக்குடியில் பிரசாரத்தில் பேசிய அவர், கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரத்தில், உள்ளூர் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து செயல்படுவேன். நான் உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என்றார்.
முன்னதாக சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு இன்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வந்தார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி- எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள ஜோதிநகர் ஹெலிபேட் தளத்தில் இறங்கினார். பின்னர் கார் மூலம் தூத்துக்குடி அண்ணா நகர் சென்றார். அங்கு 11.30 மணிக்கு தூத்துக்குடி மேயர் வேட்பாளர் சசிகலா புஷ்பா, 60 வார்டுகளின் கவுன்சிலர் மற்றும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு பாளை ஆயுதப்படை மைதானம் வந்தார். அங்கிருந்து காரில் நெல்லை டவுன் வாகையடி முனைக்கு வந்து நெல்லை மேயர் வேட்பாளர் விஜிலா சத்தியானந்த் மற்றும் உள்ளாட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
பின்னர் ஹெலிகாப்டரில் அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் செல்கிறார். பின்னர் தனி விமானத்தில் மதுரை செல்கிறார்.












Click it and Unblock the Notifications